ஆர்யன் –திரைவிமர்சனம் – 4/5

cinema news movie review

ஆர்யன் –திரைவிமர்சனம் – 4/5

நடிகர்கள் :விஷ்ணு விஷால், செல்வராகவன்,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,மானஸா,மற்றும் பலர்.

இசை:ஜிப்ரான்,

ஒளிப்பதிவு:ஹரிஷ் கண்ணன்,

இயக்கம்:பிரவீன்k

தயாரிப்பு:சபார, அறியன் ரமேஷ், விஷ்ணு விஷால்.

படம் தொடங்குமே பரபரப்பை கிளப்புகிறது  ஒரு டிவி சேனலின் நேரடி ஒளிபரப்பின்போது செல்வராகவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்வது போல அதிர்ச்சியான  காட்சி. அதற்குப் பிறகு வெளியாகும் அவரது வீடியோவில், அடுத்ததாக யாரை “கொல்லப்போகிறேன்” என்று கூறும் செல்வராகவனின் உரை, கதையை இன்னும் தீவிரப்படுத்துகிறது. அதன்படி தொடர்ச்சியாக நிகழும் கொலைகள், அதை ஊடகங்கள் வழியாக அறிவிக்கும் வில்லனின் உளவியல் பின்புலம்  இவை அனைத்தையும் ஆராய்வது தான் கதையின் மையம்.

இந்த தொடர் கொலைகளின் புதிரைத் தீர்க்கும் அதிகாரியாக விஷ்ணு விஷால் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரி எதிர்கொள்ளும் தளர்ச்சி, கோபம், மனக்கசப்பு அனைத்தையும் மிகுந்த நுணுக்கத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். கிரைம் த்ரில்லர் கதைகள் விஷ்ணு விஷாலுக்கு இயல்பாகவே பொருந்துவது போலத் தோன்றுகிறது.

இரு நாயகிகளில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தன்னுடைய வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக திகழ்கிறார்; ஒவ்வொரு காட்சியிலும் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு நாயகி மானஸா அழகாக இருந்தாலும், அவருக்கு அளிக்கப்பட்ட இடம் பலமாகவே உள்ளது.

வில்லனாக வந்துள்ள செல்வராகவன் அவரின் ட்ரேட்மார்க் நடிப்பு இங்கேயும் மிளிர்கிறது. தன் செயல்களுக்கு நியாயம் சொல்லும் அவரது உரைகள், சில நேரங்களில் பார்வையாளர்களிடமும் அனுதாபத்தை எழுப்புகின்றன.

படத்தின் திரைக்கதை பிரவீன் கே மற்றும் மனு ஆனந்தின் கூட்டு முயற்சியில் செதுக்கப்பட்ட விதம் பாராட்டத்தக்கது. வழக்கமான “யார் கொலைகாரன்?” என்கிற பாதையில் செல்லாமல், கொலையாளியை ஆரம்பத்திலேயே காட்டிவிட்டு, “ஏன்?” என்ற கேள்வியை மையமாக்கி கதையை நகர்த்தியிருப்பது வித்தியாசமான அணுகுமுறை. இதுவே படத்தைக் கவர்ச்சிகரமாக்குகிறது.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்தின் திகில் நெருக்கத்தை மேலும் உயர்த்துகிறது. ஒவ்வொரு விசாரணைக் காட்சிக்கும் இசை உயிர் ஊட்டுகிறது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் காட்சியமைப்புகள் — இருள், வெளிச்சம், நகர நிழல்கள் ஆகியவற்றை அழகாக இணைத்து, திரையில் ஒரு தனி சூழ்நிலையை உருவாக்குகின்றன.

இறுதிக் கட்டத்தில் வெளிப்படும் சமூகச் செய்தி  கட்டாயப்படுத்தாமல் இயல்பாகக் கதைக்குள் கலந்து சொன்ன விதம் பாராட்டத்தக்கது. வசனங்களும் துல்லியமாகவும் தாக்கமுமாகவும் இருக்கின்றன.

மொத்தத்தில், ‘ஆர்யன்’ ஒரு சாதாரண கிரைம் த்ரில்லராக அல்லாமல், சமகால சமூகப் பிரச்சினையை சிந்திக்க வைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு கலைநயமான திரைப்பயணம். விஷ்ணு விஷாலின் சிறந்த நடிப்பு, செல்வராகவனின் தீவிரமான எதிர் கதாபாத்திரம், பிரவீன் கேயின் நுட்பமான இயக்கம்  இவை மூன்றும் சேர்ந்து ‘ஆர்யன்’ படத்தை வலிமையுடன் நிறுத்துகின்றன.

மொத்ததில் ஆர்யன் திகில் சொல்லும் படம்.