மோடி திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஜினி ட்வீட்

News

நடிகர் ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய ரசிகர்களைச் சந்தித்தார்.

அப்போது, அரசியல் பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவித்தார். ‘போருக்குத் தயாராக இருங்கள். தேவைப்படும் போது களம் இறங்குவேன். அரசியல் சிஸ்டம் சரியில்லை’ என்று கூறினார்.

இதனால், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே, ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ரஜினி விரைவில் அரசியலுக்கு வரத் தயாராகிறார் என்று கூறப்பட்டது. தமிழருவி மணியன் இதற்கு முன் ஏற்பாடாக பொதுக்கூட்டம் நடத்தினார். அதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர்.

சமீபத்தில் நீட் தேர்வை கண்டித்து உயிரிழந்த அனிதாவின் மரணத்துக்கு, ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். இது தவிர தான் நடிக்கும் படங்கள் உள்பட பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் துணை ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்ற வெங்கையா நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். தற்போது பிரதமர் மோடியின் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மோடி தனது தூய்மை இந்தியா திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இதுபற்றி ரஜினி தனது டுவிட்டர் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முழுமையாக எங்கள் மரியாதையையும், எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன். சுத்தம் என்பது தெய்வ பக்தி.” என்று குறிப்பிட்டுள்ளார்.