full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

மன்னிப்பு கேட்ட மிஷ்கின்.. புகழ்ந்து தள்ளிய ராம்!

சவரக்கத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் G.R.ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா , இயக்குநர் மிஷ்கின் , கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட கலந்து கொண்டனர்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில்,

“நான் என்னுடைய தம்பியும் இயக்குனருமான ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். போஸ்டர்களில் என்னுடைய பெயரை அவருடைய பெயரை விட பெரிதாக போட்டிருக்கிறார்கள். அதற்கு படத்தை வாங்கியவர்கள் தான் காரணம். என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பதால் தான் அப்படி போட்டிருக்கிருக்கார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு எப்போதும் என்னுடைய படத்தின் விளம்பரங்களில் என்னுடைய பெயரை பெரிதாக போடுவது பிடிக்காது. நான் சென்ற பிறகு ஐம்பது வருடம் கழித்து என்னை பற்றியும் , நான் எடுத்த படம் இது என்றும் எல்லோரும் பேசினால் போதும். எனக்கு “சவரக்கத்தி” படத்தின் மூலம் எந்த லாபமும் இல்லை. எனக்கு எந்த லாபமும் வேண்டாம். அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். படத்தில் ஓர் இடத்தில் அம்மாவின் பாசத்தை மையப்படுத்தி ஒரு இசை ஒன்றை கொடுத்துள்ளார். அது எனக்கு மிகவும் பிடித்த இசை. அவர் சிறப்பான இசையமைப்பாளர். இயக்குநர் ராம் இந்த படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். தன்னுடைய காலில் அடிபட்ட பின்னரும் அவர் படபிடிப்பில் தொடர்ந்து கலந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். அவருடைய படமான “பேரன்பு” சிறப்பாக வந்துள்ளது. அந்த படத்தை உலக திரைப்பட விழா ஒன்றில் அடுத்த வாரம் திரையிடவுள்ளனர். கண்டிப்பாக அவர் அந்த படத்துக்காக பல விருதுகளை வாங்குவார் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், “முதன்முறையாக மலையாள நடிகை ஒருவர் தமிழ் படத்தில் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். அது நடிகை பூர்ணா. இந்த படத்துக்காக அவர் சொந்த குரலில் சுத்த தமிழில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தை 9௦% வெற்றியை நான் பூர்ணாவுக்கு சமர்பிக்கிறேன். 1௦% வெற்றியை நான் இயக்குநர் ராமுக்கு சமர்பிக்கிறேன். எம்.ஜி.ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் இத்தனை வருடங்களாக நம்மை மகிழ்வித்து வருகிறார்கள். அவர்கள் நடித்த படங்களை நான் திரையரங்குக்கு சென்று கண்டுள்ளேன். அப்படங்கள் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை அளித்துள்ளது.திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு சமூக கடமை. திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும்” என்றார் இயக்குநர் மிஷ்கின்.

இயக்குநர் ராம் பேசுகையில், “இந்த உலகில் குடிக்க , அன்பை பற்றி பேச , படிக்க , கவலை மறக்க ஓர் இடம் எனக்கு இருக்கிறது என்றால் அது மிஷ்கினின் அலுவலகம் தான். எல்லோரும் மிஷ்கின் தன்னுடைய அலுவலகத்தில் இத்தனை புத்தகங்களை வைத்துள்ளாரே அதை படிப்பாரா என்று கேட்பார்கள் ? அவர் நிஜமாகவே அனைத்தையும் வாசிப்பார். அவருக்கு அந்த நாளைக்கு எந்த புத்தகம் தேவைப்படுகிறதோ அதிலிருந்து ஒரு பக்கத்தை படிப்பார். என்னுடைய படத்திலும் , மிஷ்கினின் படத்திலும் நகைச்சுவை என்ற விஷயமே இருக்காது. ஆனால் இந்த படத்தில் மாறாக டார்க் காமெடி இருக்கும். என்னை பொறுத்தவரை மிஷ்கின் எழுதிய மிகச்சிறந்த கதை சவரகத்தி தான். சவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவம் என்னை முழுமையான மனிதனாக மாற்றியுள்ளது” என்றார்.