சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா

சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments) – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas) சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதை வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments ) – ஃபார்ச்சூன் ஃபோர் ( Fortune Four Cinemas ) சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் கலையரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் முன்னிலையில் கோலாகலமாக திருவிழா போல் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ, இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், நடிகர் சூர்யா, நடிகை மமீதா பைஜூ, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ், தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் என பலர் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் அருண் ராஜா காமராஜ் பேசுகையில், ”இது போன்றதொரு பிரம்மாண்டமான நிகழ்வை முதலில் எனக்கு வழங்கியது ஜிவி.பிரகாஷ் குமார் தான். நான் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருந்தபோது என்னை பாடலாசிரியராக்கி மிகப் பெரிய மேடையை கொடுத்தார். அவருடைய முதல் படத்திலிருந்து நான் அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன்.
நான் இன்று இயக்குநராக உயர்ந்திருப்பதற்கு முதல் காரணம் சூர்யா நடித்த ஆயுத எழுத்து திரைப்படம் தான். அந்தப் படத்தை பார்த்துவிட்டு இயக்குநராக வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டேன். இன்று அவருடைய படத்திற்கு பாடலை எழுதியிருக்கிறேன்…. அவருடைய படத்திற்கு நான் பாடியிருக்கிறேன்…. இதை நினைத்து மிகவும் சந்தோசம் அடைகிறேன்.
என் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் சூர்யா சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவர் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கிறார். அந்த வகையில் அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் வெங்கி அட்லூரி என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் பாடலை எழுதுவதற்கான வாய்ப்பை கொடுத்தார். நான் இதுவரை ஹீரோக்களை போற்றி பாடும் பாடல்களை தான் எழுதி இருக்கிறேன். அந்தப் பாடலுக்கு நான் கத்தி பாடி உயிரை கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல்முறையாக ஒரு ‘பட்டாம்பூச்சி’ போதும் என்று சொல்லி பாடல் எழுத வைத்தனர். அதுவும் ஒரு காதல் பாடல். அது ரசிகர்களாகிய உங்களின் வரவேற்பால் மிகப்பெரிய ஹிட் பாடல் ஆகவும் மாறி இருக்கிறது. நீண்ட நாட்கள் கழித்து ஒரு காதல் பாடலை எழுதி இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த ஒரு பாசிட்டிவான விசயமாக எடுத்துக் கொள்கிறேன். இதற்காக வெங்கி- சூர்யா- ஜிவி பிரகாஷ் குமார் -ஆகிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை மமீதா பைஜூ பேசுகையில், ” என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பதட்டமே இல்லாமல் இயல்பாக இருப்பார். அவரின் இயக்கத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
சூர்யாவுடன் ஏற்கனவே இணைந்து நடிக்க வேண்டிய வாய்ப்பு ‘மிஸ்’ ஆகிவிட்டது. ஆனால் இந்த முறை கடவுள் அந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமான மறக்க இயலாத அனுபவம். படப்பிடிப்பு தளத்தில் அவரை பார்த்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். அவருடைய ஒழுக்கம்- அணுகுமுறை- காட்சிக்கு தயாராகும் விதம் -திரைக்கு பின்னால் அவரின் செயல்பாடு- என பல விசயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்திலும் அவர் எனக்கு ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தார். மிகவும் பெருந்தன்மையான சக நடிகர். அவருக்கு நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுக்கும், சுனில் ரெட்டிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும். அது படத்திலும் எதிரொலிக்கும். நாங்கள் தற்போது ராதிகா சரத்குமார் மேடத்தை மிஸ் செய்கிறோம். அவர்கள் ஒரு அற்புதமான கலைஞர். இனிமையானவர். படப்பிடிப்பு தளத்தில் எனக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்தார்கள் “ என்றார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பேசுகையில், ” மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த ‘வாத்தி’ படத்திற்குப் பிறகு, மீண்டும் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா க்கு நன்றி.
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் மிகவும் ஸ்பெஷலானது. சூர்யாவின் ‘சூரரை போற்று’ படத்திற்குப் பிறகு நானும் அவரும் இணைந்து பணியாற்றிருக்கிறோம். ‘சூரரைப் போற்று’ திரைப்படம் – எங்கள் இருவருக்கும் முதன்முறையாக தேசிய விருதை வழங்கிய படம். அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் அளித்த கூட்டணி.
அந்த தருணத்தில் சூர்யா சார் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய உதவியை செய்தார். அதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.
அதன் பிறகு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ திரைப்படத்திற்கும் எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு அவரது இயக்கத்தில் ‘லக்கி பாஸ்கர்’ என்ற ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தில் இணைந்தோம். அதை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறோம். இதனால் இந்த படத்தில் என்னுடன் இரண்டு ஸ்பெஷல் ஃபோர்ஸஸ் இருக்கிறார்கள்.
இந்தப் படம் நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து பார்க்க வேண்டிய படம். ஒரு பீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னர். சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும். இன்று சூர்யாவின் ரசிகர்களுக்காக அவர்கள் விரும்பிய தி ஒன் (The One) பாடலை வெளியிடுகிறோம். அது சூர்யாவின் அன்பான ரசிகர்களுக்கான ஆக்ரோஷமான பாடல்.
நடிகை மமீதா பைஜூவை நான் ஐந்து ஆண்டுகளாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் அன்பானவர். ‘பட்டாம்பூச்சி’ பாடலை அவர் தன்னுடைய நடனத்தின் மூலம் மெருகேற்றியுள்ளார். இந்த பாடல் வெளியான பிறகு அவருடைய நடனத்திற்கு கிரேஸ் அதிகமாகிவிட்டது. சமூக ஊடகங்களில் அவருடைய நடன அசைவுகளை ரீ கிரியேட் செய்து வருகிறார்கள். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய கடின உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கு நன்றி.
இவற்றையெல்லாம் கடந்து சூர்யா சார். இந்த படத்தில் எமோஷனலாக… அழகாக… அற்புதமாக …நடித்திருக்கிறார். இது அனைவருக்கும் பிடிக்கும். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்க்கலாம். இந்தப் படம் ஒரு இதயபூர்வமான படமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்ஷீ பேசுகையில், ” இது என்னுடைய இரண்டாவது தமிழ் படம். நாங்கள் இந்த திரைப்படத்தை கோவையில் தான் தொடங்கினோம். இங்கு வருகை தந்து, இங்கிருந்து பழனிக்குச் சென்று, முருகனை தரிசித்து விட்டு, அதன் பிறகு கோவையில் தான் படப்பிடிப்பை தொடங்கினோம். படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் நிகழ்வையும் கோவையில் தான் தொடங்கி இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை கோயம்பத்தூர் மிகவும் வெற்றிகரமான- வெற்றியை வழங்கக் கூடிய இடம்.
என் மீதும், இயக்குநர் வெங்கி மீதும் நம்பிக்கை வைத்ததற்காக சூர்யாவிற்கு நன்றி. இந்தப் படத்தில் சூர்யா மிக இளமையாக நடித்திருக்கிறார். சூர்யாவின் ரசிகர்களுக்கு நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நீங்கள் இந்தப் படத்தில் ஒரு ‘சஞ்சய் ராமசாமி’யை போன்ற ஒரு கதாபாத்திரத்தில் சூர்யாவை பார்க்கலாம்.
நான் தெலுங்கு தாய் மொழியை கொண்டிருந்தாலும் எனக்கு ஏராளமான தமிழ் மக்கள் நண்பர்கள். தமிழ் மக்கள் அனைவரும் எங்களது தயாரிப்பில் உருவான ‘அலகொண்ட வைகுந்தபுரம்’ படத்தை கொண்டாடினார்கள். நான் இதை ஒரு ஒப்பிடுவதற்காக சொல்லவில்லை. நாங்கள் இந்த படத்தின் மீது அந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கிறோம். அந்த வகையில் இந்த படம் தமிழில் உருவாகி இருக்கும் ஒரு ‘அலகொண்ட வைகுந்தபுரம்’ என சொல்வேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
ஜென் ஸீ இளைஞர்களுக்கு பிடித்த நடிகையாக மமீதா பைஜூ இருக்கிறார். அவர்களின் பேரன்பினை சம்பாதித்து இருக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் பாதியில் சூர்யா- மமீதா- ராதிகா சரத்குமார் – ஆகியோர் இடம்பெறும் ஒரு காமெடி காட்சி வரும். இந்த காட்சியை பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் அது உங்களுடைய உணர்வுகளை எப்படி பாதித்தது என்பதை…. உங்களது நினைவுகளை எப்படி கிளறியது என்பதை… அனைவரும் தங்களது சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எங்கள் நிறுவனத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் மூன்றாவது திரைப்படம். ஹாட்ரிக் வெற்றியை பெறும். சூர்யாவின் ரசிகர்களுக்காக அவருக்கான பின்னணி இசையை மிகச் சிறப்பாக தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், ” இந்தப் படத்தின் பணிகளை பழனி முருகனின் ஆசியுடன் கோவையில் தான் தொடங்கினோம் என தயாரிப்பாளர் குறிப்பிட்டார். ஏனெனில் இந்த இடம்… இந்த ஊர்… இந்த மக்கள்… அனைவரும் சூர்யா சாரின் சொந்தங்கள்.
இந்த படத்தின் இந்த நிகழ்வை இந்தியாவில் எந்த நகரத்தில் வேண்டுமானாலும் எங்களால் நடத்தி இருக்க முடியும். ஆனால் சூர்யாவின் சொந்த மண்ணில்… அவருடைய அன்பான ரசிகர்களுக்காக… இங்கு நடத்த தீர்மானித்தோம். உங்களின் வருகையால் இந்த நிகழ்ச்சி திருவிழா போல் அமைந்து, எங்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இந்தப் படத்தின் கதையை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ராஜசேகரிடம் சொன்னபோது.. அவர் கதையைக் கேட்டு சில இடங்களில் கண்ணீர் விட்டார். உடனடியாக சூர்யாவை சந்தித்து கதை சொல்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்காக ராஜசேகருக்கு நன்றி.
அதன் பிறகு சூர்யாவை சந்தித்து முழு கதையையும் விவரித்தேன். அதைக் கேட்டு விட்டு உடனடியாக எனக்கு ஆசி வழங்கி, இப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறோம் என்றார். 2023 ஆம் ஆண்டில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். அதன் பிறகு அவருடன் இந்த படத்தில் இணைந்து அழகான படத்தில் பணியாற்று இருக்கிறேன். இதற்காக அவருக்கும் நன்றி.
படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சின்ன தங்கச்சியாக மமீதா பைஜூ துறுதுறு என்று இருந்தார். அவர் வந்தால் படப்பிடிப்பு தளமே உற்சாகமாக மாறிவிடும். அவர் இருந்தால் நடிகை என்கிற எண்ணம் இல்லாமல் குடும்பத்தினரோடு இருக்கிறோம் என்று உணர்வை ஏற்படுத்தி விடுவார். அவர் ஒரு நம் குடும்பத்தை சார்ந்த உறுப்பினர் போல் அனைவர் மீதும் அக்கறை காட்டுவார். சூர்யா சார் சகோதரரை போலும்… ராதிகா மேடம் தாயைப் போலவும் …மமீதா தங்கையை போலும்… இருப்பார்கள்.
ஜிவி பிரகாஷ் குமாருடன் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும்…. ஒவ்வொரு விசயத்திற்கும்… என்னை அவர் எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். என்னுடைய எதிர்பார்ப்பை விட எப்போதும் சிறந்த ஒன்றைதான் அவர் எனக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்.
நான் படத்தை பின்னணி இசையுடன் முதல் பாதியை பார்த்து விட்டேன். மிக சிறப்பாக இருக்கிறது. சூப்பர்ப். அதனால்தான் இப்படத்தைப் பற்றி நம்பிக்கையுடன் என்னால் சொல்ல முடியும். இந்த திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களை மட்டுமல்ல… அவர்களுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பிடிக்கும் படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்கள் மட்டுமே வருவார்கள். ஆனால் நான் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு ரசிகர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தினரை அழைத்து வாருங்கள். அனைவரும் மகிழ்ச்சியை கொண்டாடுவார்கள். படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது உங்கள் மனதில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கும்.
அருண் ராஜா காமராஜ் எழுதிய ‘பட்டாம்பூச்சி’ பாடல்- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரீல்ஸ்களால் சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அவருக்கும் நன்றி.
இது சூர்யாவுக்கு ஒரு நியூ ஏஜ் ஃபிலிம். இந்த திரைப்படம் ஜென் ஸீ ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.
தயாரிப்பாளர் படத்தின் முதல் பாதியில் இடம் பெறும் ஒரு காமெடி காட்சியை பற்றி குறிப்பிட்டார். அது வீட்டில் இருக்கும்போது சிகரெட்- ட்ரிங்க்ஸ்- போன்ற விசயத்தை மறைத்து மறைத்து செய்யும் போது.. அதற்காக ராதிகா- சூர்யா -மமீதா- ஆகிய மூவருக்கும் இடையே ஏற்படும் புரிதல் தொடர்பான காட்சி. அது பத்து நிமிடம் வரை நீடிக்கும். இது அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். அனைவரும் இதனை கடந்து வந்திருப்பார்கள். அதனால் இந்தக் காட்சியை பார்த்தவுடன் உங்கள் வாழ்க்கை இது போல் நடந்திருந்தால்…. அதனை ட்வீட் செய்யுங்கள் தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார்” என்றார்.
நடிகர் சூர்யா பேசுகையில், ” கோவை விமான நிலையத்திலிருந்து இந்த விழா நடைபெறும் இந்த தருணம் வரை இதனை ஒரு திருவிழாவை போல் கொண்டாடிவரும் ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது நீங்கள் வைத்திருக்கும் இந்த அன்பிற்கு நன்றி.
ஒரு காரணத்திற்காக நான் என் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் ரசிகர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்… என்ன செய்தீர்கள்… என்பதை நான் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறேன். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானத்தை வழங்கியுள்ளீர்கள். நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறீர்கள். குட்டி குழந்தைகள் முதல் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய ஆடைகளை வாங்கி பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இவை எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.
கோயம்புத்தூர் பிறந்த மண் என்பதால் இங்கு வந்தவுடன் நிறைய ‘பிளாஷ்பேக்’குகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை ஒவ்வொரு வருடத்திலும் கோடை விடுமுறைக்கு கோயம்புத்தூர் வந்து விடுவேன். கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து காரில் பயணிக்கும் போது சூலூர் -காசி கவுண்டர் புதூர்- புளியம்பட்டி- கவுண்டம்பாளையம் – இளையராஜாவின் பாடல்கள் – ஆடு மாடு மேய்ப்பது- மாட்டு வண்டி ஒட்டுவது – வயலில் நடப்பது- வரப்பில் உறங்குவது- கிணற்றில் குதிப்பது.. என எல்லா செயல்களையும் செய்திருக்கிறேன்.
கடந்த வருஷம் தியாவையும், தேவ்வையும் அழைத்துக் கொண்டு வந்து… இந்த புளிய மரத்தில் தான் விளையாடினேன்…. இந்த கிணற்றில் தான் குதித்தேன்…. இந்த வாய்க்காலில் தான் படுத்துக் கொண்டிருந்தேன்… என ஒவ்வொரு விசயத்தை அவர்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அதன் பிறகு குலதெய்வ கோயிலுக்கும் சென்று வந்தோம். இது எல்லாம் நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்… நாம் டிஜிட்டல் ஸ்கிரீனுடன் செலவழிக்கும் நேரம் அதிகமாகி விட்டது. நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடும் நேரம் குறைவாகிவிட்டது. அதனால் தயவு செய்து குடும்பத்தினருக்கான நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக செலவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன் இதில் நானும் அடங்கி இருக்கிறேன். நானும் ஸ்கிரீன் நேரத்தை குறைத்துக் கொண்டு, குடும்பத்துடன் செலவிட வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.
நினைவுகளை உருவாக்குங்கள். சேமித்திடுங்கள். அது ஊரில் இருக்கும்போதுதான் கிடைக்கும். இதனை ஒருபோதும் யாரும் தவற விட்டு விடாதீர்கள். ஃபோனை பார்ப்பதன் மூலம் கிடைக்கும் நினைவுகளை விட, உங்களை சுற்றி உள்ள மக்களைப் பற்றி… ஊரைப் பற்றி… உறவுகளைப் பற்றி… நிறைய விசயங்களை பேசி, கலந்து உரையாடி, நினைவுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். இதைப் பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.
‘கருப்பு’ படத்திற்கு பிறகு இப்போது தான் உங்களை நான் சந்திக்கிறேன். ‘கருப்பு’ படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்ட போது உடன் நின்று ஆதரவு அளித்து படத்தை வெளியிட ஒத்துழைப்பு வழங்கிய விநியோகஸ்தர்கள்- திரையரங்கு உரிமையாளர்கள்- ஃபைனான்சியர்கள்- என அனைவருக்கும் இந்தத் தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் நூறாவது நாள் விழா விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிதாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் வம்சி சார்- இந்த நிறுவனம் ஒரு ஆண்டிற்கு பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்தாலும்…. ஒவ்வொரு திரைப்படத்தின் பணிகள் குறித்து அவருக்கு எல்லா விசயங்களும் தெரியும். அவர் பணத்தை மட்டும் முதலீடு செய்யாமல்… மக்களுக்கு எந்த மாதிரியான படத்தை வழங்குகிறோம்..? எப்படி வழங்க வேண்டும்..? என ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்தும் ஒரு அற்புதமான தயாரிப்பாளர்.
‘ஜெர்சி’, ‘லக்கி பாஸ்கர்’ என தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்த அவர் , அடுத்து என்ன மாதிரியான படத்தை வழங்கலாம் என்று யோசித்து, அவர் தயாரித்த திரைப்படம் தான் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இதற்காக என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். பார்த்த பிறகு அவருக்கு எனக்கு ஒரு நல்ல படத்தை வழங்கி இருக்கிறீர்கள் என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி.
நானும், சுனிலும் ஒன்றாக படிக்கவில்லை. ஆனால் நிறைய ஊர் சுற்றி இருக்கிறோம். நாங்கள் இருவரும் மீண்டும் 25 வருடத்திற்கு பிறகு இணைந்து நடித்திருக்கிறோம்.
எனக்கு மீசை முளைக்காத நாட்களில் பார்த்து வியந்த இன்றைய விழாவின் நாயகன் ஜீவி பிரகாஷ் குமார்.
ரேடியோ மிர்ச்சியில் ஜிங்கிள்ஸிற்கு இசையமைத்தது இவர் தான் என சிறுவனாக இருந்த இவரை காட்டிய போது நான் வியந்து ரசித்தேன்.
அது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடி, ஆடி நடித்த முதல் இசையமைப்பாளர் இவர்தான். ‘ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடலை மேடையில் பாடி ஆடியதை நான் பார்த்து ‘அட!’ என வியந்திருக்கிறேன். அந்த தருணத்திலிருந்து அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். அதில் ‘சூரரை போற்று’ மிக முக்கியமான படம். உச்சக்கட்ட காட்சியில் பாடலை வைத்து இன்னும் மெருகேற்றினார். அந்தப் படத்திற்கு தேசிய விருது எனும் மரியாதையும் கிடைத்தது. அவருடனான ஏராளமான நல்ல நினைவுகள் – அனுபவங்கள் பசுமையாய் இருக்கிறது. என் மீது அவர் காட்டும் நிபந்தனையற்ற அன்பிற்கு நன்றி.
இந்தப் படத்தில் ராதிகா மேடத்திற்கும் மமீதாவிற்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ஸ்பெஷலாக இருக்கும்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடன் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே ஆப்ஷனாக செலக்ட் செய்தது மமீதாவை தான். நாங்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் நடிக்க இருந்தோம். ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. ஆனால் இந்த படத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மமீதா ஒரு மேஜிக் செய்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு அற்புதமாக ஏற்று நடித்திருக்கிறார். தமிழில் அவரே பின்னணியும் பேசியிருக்கிறார். தமிழிலும் நன்றாக பேசியிருக்கிறார்.
இந்தப் படத்திற்காக இயக்குநர் வெங்கி பிரார்த்தனை செய்ததாக சொன்னார். நானும் பிரார்த்தனை செய்தேன். நான் அவருடைய ‘லக்கி பாஸ்கர்’ படத்தைப் பார்த்து பிரமாதமாக இருக்கிறதே..! என வியந்து ரசித்தேன்.
எனக்கு வெவ்வேறு இயக்குநர்கள்- வெவ்வேறு அடையாளத்தை கொடுத்திருக்கிறார்கள். அதில் ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ எனக்கு ஒரு புது அடையாளம். அந்த அடையாளத்தை கொடுத்தது இயக்குநர் வெங்கி. நான் இதைப் போன்றதொரு படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அவருடைய எழுத்தின் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு. இந்தப் படத்தில் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். அந்த மூன்று கதாபாத்திரங்களையும் எழுத்தில் அழகாக உருவாக்கியிருக்கிறார். உறவுகளைப் பற்றி அற்புதமாக பேசியிருக்கிறார். இந்த படத்தை பார்க்கும்போது உங்களின் உதட்டோரம் சின்ன புன்னகை எட்டிப் பார்க்கும். இது படம் முழுவதும் இருக்கும்.
இந்தப் படத்தில் ரொமான்ஸ்- ஃபேமிலி- காமெடி- என எல்லாம் இருக்கும். ஹீரோயிசமும் இருக்கும். எல்லாம் கலந்த ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும். இயக்குநர் வெங்கி சொன்னது போல்.. இது என்னுடைய ரசிகர்களுக்கான படம் மற்றும் என்னுடைய ரசிகர்களின் குடும்பத்தினர்களுக்கான படமும் கூட. ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. உங்களுடைய அன்பும், ஆதரவும் இந்தப் படத்திற்கும் வழங்குங்கள்.
இன்று நண்பர்கள் தினம். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். எனக்கு கிடைத்த வெற்றியை போல் உங்கள் அனைவருக்கும் உங்களுடைய வாழ்க்கையில் இதற்கும் மேலான வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அதே தருணத்தில் நீங்கள் ஆசைப்பட்ட அனைத்து விசயங்களும் நடந்தேற வேண்டும் என்றால் ..முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி கிடைக்கும். சந்தோஷம் கிடைக்கும். இவை அனைத்தும் கிடைக்க ஆண்டவனிடம் நானும் பிரார்த்திக்கிறேன். இந்த நிகழ்ச்சியை திருவிழா போல் மாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.
