full screen background image
Search
Sunday 28 April 2024
  • :
  • :
Latest Update

குலேபகாவலி – விமர்சனம்!

அப்பாடா எவ்ளோ நாளாச்சு இப்படி வயிறு வலிக்க சிரிச்சு?? தேங்க்ஸ் டூ “குலேபகாவலி”.

கருத்து இருக்கா ? இல்லை.. செண்டிமென்ட் இருக்கா? இல்லை..
லாஜிக் இருக்கா? இல்லை..

இப்படி பல இல்லைகள் இருந்தும், ஒரு படம் நம்மை மகிழ்விக்க வேண்டுமெனில் ஒன்று மட்டும் இருந்தால் போதும்… எண்டெர்டெயின்மெட்!

“குலேபகாவலி” முழுக்க எண்டெர்டெயின்மெண்ட்..எண்டெர்டெயின்மெண்ட்.. எண்டெர்டெயின்மெண்ட் மட்டும் தான்..

நம்ம “ஊர்வசி ஊர்வசி” பிரபுதேவா அப்படியே திரும்பக் கிடைத்திருக்கிறார். என்னா ஸ்பீடு.. என்னா மூவ்மெண்டு.. சொன்னாலும் சொல்லாட்டாலும் பபுள்கம் பாடி தான் அவருடையது.. நடிப்பு,
டான்ஸ் எல்லாவற்றிலும் அதே பழைய குறும்பு.. அதே பழைய எனர்ஜி..

படத்தின் ஆச்சர்ய பேக்கேஜ் ரேவதி. இப்படி அலட்டலான, ஆர்ப்பாட்டமான ரேவதியை நாம் இதற்கு முன் திரையில் பார்த்ததேயில்லை. ரேவதி செய்கிற ரவுசு, ராவடிக்கு சிரிக்காமல் இருந்தால்
ஐநூறு பொற்காசுகள் என்று “காண்டெஸ்ட்” கூட நடத்தலாம்.பிண்ணிட்டீங்க மேடம். அதுவும், கார் திருடி விற்றுவிட்டு ஸ்டைலா நடக்கிற அந்த நடை.. சத்தியமா சான்ஸே இல்ல.. சூப்பரோ சூப்பர்.

யோகிபாபு, முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், சத்யன், ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன் என ஒவ்வொரும் பேசும் தனித்தனி வசனங்களுமே சிரிக்க வைத்தால் எங்கே போய் நாம் குறையைத் தேட..
லாஜிக் இத்யாதி விவகாரங்களை எல்லாம் தூக்கி வீசி விட்டு சிரித்துக் கொண்டு மட்டுமே இருக்கலாம் இவர்களால்..

ஹன்சிகா பேபியோட கம்பேக் படம்.. வெள்ளை வெளேர் என்று அதே மைதா மாவை பிசைந்து செய்த பொம்மையாக அழகாய் இருக்கிறார். பாடல் காட்சிகளில் இன்னும்.. இவ்ளோ கூட்டத்தில்
தனியாய்த் தெரிவதே பெரிய விசயம், அதையும் தாண்டி ஸ்கோர் செய்கிறார் ஹன்சிகா. அவருக்கு டப்பிங் பேசியவருக்கும் வாழ்த்துகளை சொல்லிக் கொள்ளலாம்.

மெர்வின்-விவேக், “வடகறி” படத்தின் பாடல்களால் கவனம் ஈர்த்த இசையமைப்பாளர்கள்.. “குலேபகாவலி” நிச்சயம் அவர்களுக்கு வேறொரு இடத்தைப் பெற்றுத் தரும். ஒவ்வொரு காட்சிக்கும்
இவர்களது பின்னணி இசை வேற லெவல். மூன்று பாடல்களும் கேட்கவும், பார்க்கவும் அத்தனை அழகு.

ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், எடிட்டர் விஜய் வேளிகுட்டி, ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.அனந்தகுமார், கலை இயக்குநர் கதிர் என அத்தனை பேருமே படத்திற்காக தனித்தனியே மெனக்கெட்டிருக்கிறார்கள்.

கலை இயக்குநர் கதிருக்கு எக்ஸ்ட்ரா பாராட்டுக்கள், அந்த கார் செட் வீட்டுக்காக.

ஃபைனலி இயக்குநர் கல்யாண்.. எங்க ப்ரோ இருந்தீங்க இவ்ளோ நாள்?, நம்ம இந்தியன் டீம் பௌலர் பும்ரா ஓபனிங் இறங்கி முதல் பந்திலேயே சிக்ஸ் அடிச்சா எவ்ளோ சந்தோஷம் இருக்கும் நமக்கு?
அப்படித் தான் இயக்குநர் கல்யாணின் குலேபகாவலி தரும் ஃபீலிங். பொங்கல் ரேஸ், விக்ரம்.. சூர்யா படங்களோடு வந்து ஸ்கோர் செய்வதென்பது வேற லெவல் கான்பிடென்ஸ்.
படத்தின் அடுத்த காட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைவிட, அடுத்த காட்சியை இயக்குநர் சொதப்பிவிடக் கூடாது என்று அக்கறை கொள்ள ஆரம்பித்து விடுகிறோம்.. நாம் எதிர்பார்க்கும் படியே
சில காட்சிகள் அமைந்திருந்தாலும், நாம் எதிர்பார்க்காத நிறைய திருப்பங்களுடன் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் குபீர் சிரிப்பை வரவைக்கும் படி இருப்பது படத்திற்கு
மேலும் வலு சேர்க்கிறது.

படத்தின் முதல் பத்து நிமிடங்கள் வரும் காட்சியமைப்பும், மியூசிக் எக்ஸ்பீரியன்ஸும் கண்டிப்பாக மிஸ் செய்யக் கூடாதவை.

ஆமா, இவ்ளோ சொல்லியாச்சு, படத்தின் கதை??. ஒண்ணுமே இல்லை, ஒரு புதையலுக்காக மூன்று திருடர்கள் ஒன்றாக இணைந்து பயணிப்பது தான்.

முக்கியமாக சொல்ல நினைத்தது ஒன்றே ஒன்று இருக்கிறது. அது நமது சென்சார் போர்டைப் பற்றி. வரவர ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று நமக்கே கடுப்பாகிறது. கிராஃபிக்ஸ் செய்த யானை, பூனை, கரடியைக் காண்பிப்பதற்குக் கூட “விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை”
அப்படின்னு கேப்ஷன் தேவைதானா ஆஃபிஸ்ர்ஸ்?

இந்த பொங்கலுக்கு குடும்பத்தோடு எஞ்சாய் செய்வதற்கு “குலேபகாவலி” நூறு சதவீதம் கேரண்டி!