full screen background image
Search
Monday 29 April 2024
  • :
  • :
Latest Update

“சீதக்காதியாகவே மாறிவிட்டார் விஜய் சேதுபதி” – இயக்குநர் பாலாஜி தரணிதரன் பாராட்டு..!!

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் ‘சீதக்காதி’.

இந்தப் படத்தில் 75 வயது நாடக கலைஞராக ‘அய்யா ஆதிமூலம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இது விஜய் சேதுபதியின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் மிக பிரமாண்டமான செலவில் வெளியிடவிருக்கும் இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று காலை பி.வி.ஆர். மாலில் நடைபெற்றது.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘சீதக்காதி’ படத்தில் நடித்த ஊட்டி மணி, கலைப்பித்தன், ஸ்ரீரங்கம் ரங்கமணி, ஐ.ஓ.பி. ராமச்சந்திரன், சந்திரா, மணிமேகலை, ஜெயந்தி, எல் மோகன், லோகி உதயகுமார், முத்துக்குமார், விடியல் விநாயகம், அப்துல், ஆதிராசன், ராகவன், கோபாலகிருஷ்ணன், சுஹாசினி சஞ்சீவ், ஜெகஜீவன் என 17 மேடை நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசும்போது, “இந்த ‘சீதக்காதி’ படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். என்னுடைய குருநாதர் பாலாஜி அண்ணாவின் படம். இந்த படம் வாழ்க்கையை பற்றியும், கலையை பற்றியும் பேசும். மனதை வருடும் ஒரு அனுபவமாக இருக்கும், படத்தை திரையரங்கில் பார்க்கும்போது இதை உணர்வீர்கள்.” என்றார்.

ஒளிப்பதிவாளர் சரஸ்காந்த் பேசும்போது, “நானும் பாலாஜியும் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் ஒன்றாக படித்தவர்கள். இந்தப் படம் எனக்கு முதல் படமாக கிடைத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். கதைக்கேற்ற வகையில் செயற்கைத்தனம் இல்லாமல், யதார்த்தமாக வண்ணங்களில் நிறைய உழைத்திருக்கிறோம்” என்றார்.

கலை இயக்குநர் வினோத் ராஜ்குமார் பேசும்போது, “தனியாக படம் செய்யும் தன்னம்பிக்கை எனக்கு இல்லவே இல்லை, ஆனால் என்னை ஊக்குவித்து எனக்கு ‘ஒரு பக்க கதை’ படம் கொடுத்தவர் பாலாஜி அண்ணா. அதை தொடர்ந்து இந்த படத்தையும் என்னை நம்பி கொடுத்திருக்கிறார். அவர் இயக்கும்  ஒவ்வொரு படமுமே தனித்துவமாக இருக்கும். தயாரிப்பாளர்களும் மிகவும் தெளிவானவர்கள், மிகவும் சுதந்திரம் கொடுத்தனர். விஜய் சேது அண்ணாவுடன் இதுவரையிலும் மூன்று படங்களில் படம் வேலை செய்திருக்கிறேன். அவரை இந்த படம் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்…” என்றார்.

படத் தொகுப்பாளர் ஆர்.கோவிந்தராஜ் பேசும்போது, “இந்தப் படத்தில் நான் மிகவும் எதிர்பார்த்தது விஜய் சேதுபதி கதாபாத்திரம்தான். ஒவ்வொரு காட்சியும் எடிட் செய்யும்போது என்னை அப்படியே கட்டிப் போட்டது. லைவ் சவுண்ட் சிறப்பாக வந்திருக்கிறது, ரசிக்க வைக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் படத்தில் முழுக்க இருக்கிறது…” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம் பேசும்போது, “இந்தக் கதையை இயக்குநர் பாலாஜி தரணிதரன் என்னிடம் சொன்னபோதே இதை எப்படி அவர் யோசித்தார் என்பதுதான் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பொதுவாக எந்த ஒரு ஹீரோவும் தங்களது லேண்ட்மார்க் படத்தை ஒரு  பெரிய பேனரில், மிகப் பெரிய படமாக தான் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள், ஆனால் விஜய் சேதுபதி 25-வது படத்தை எங்கள் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறார். அவரின் 50, 75 மற்றும் 100-வது படங்களயும் நாங்களே தயாரிக்க வேண்டும் என விரும்புகிறோம்…” என்றார்.படத்தின் இயக்குநரான பாலாஜி தரணிதரன் பேசும்போது, “இந்தப் படத்தை உருவாக்கும்போது நான்  மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். அவர்கள் எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப் பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. கடைசியில் அவரிடம்தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். ‘சீதக்காதி’தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன்.

மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப் பெரிய அனுபவம்…” என்றார்.படத்தின் நாயகன் விஜய் சேதுபதி பேசும்போது, “என் 25-வது படமாக எதை பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில்தான் இந்த படம் எனக்கு அமைந்தது. இந்தக் கதையை நம்பிய தயாரிப்பாளர்களான மும்மூர்த்திகள் சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி. இந்த கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும். வரும் 21-ம் தேதி ரிலீஸ் ஆகும் எல்லா படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், நடிகர் வெற்றி மணி, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், உமேஷ், நிர்வாக தயாரிப்பாளர் ஏ.குமார், சிங்க் சவுண்ட் ராகவ் ரமேஷ், ஆடை வடிவமைப்பு பிரியங்கா, ஒலிப்பதிவாளர் சுரேன், பப்ளிசிட்டி டிசைன் கோபி பிரசன்னா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.