யெல்லோ  திரைவிமர்சனம்

cinema news movie review

யெல்லோ  திரைவிமர்சனம்

 

நடிகர்கள்:வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி, சாய் பிரசன்னா, டெல்லி கணேஷ், லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன்,    இயக்குநர் பிரபு சாலமன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வர், லோகி, அஜய் மற்றும் பலர்.

இசை :கிளிஃபி கிரிஸ்

ஒளிப்பதிவு:அபி ஆத்விக்.

இயக்குநர்: ஹரி மகாதேவன்,

உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான (BITS Pilani) பிட்ஸ் பிலானியில் சேர்ந்து பயில்வதை கனவாகவும், லட்சியமாகவும் கொண்டு அதற்காக கடுமையான பயிற்சிகளை, (பூர்ணிமா ரவி) ஆதிரையும், அவரது காதலர் (சாய் பிரசன்னா) சந்தோஷூம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், ஆதிரையின் அப்பாவிற்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார். கனவுகளோடு காதலும் கலைகிறது. பிடிக்காத, அழுத்தம் கொடுக்கும் வேலை. ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறது. இதன் காரணமாக, ஆதிரை தன்னுடைய சிறு வயதில் பழகிய நான்கு நபர்களை தேடிச் செல்கிறார். அவர்களை சந்தித்தாரா? அதனால், அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பது தான் ‘யெல்லோ’ படத்தின் கதை.

அழுத்தமான தருணங்களிலும், தோல்விகளின் போதும் நம்மை எவ்வாறு எதிர் கொண்டு, அடுத்தக்கட்ட நகர்வினை நோக்கி எப்படி பயணப்பட வேண்டும். என்பதை, அழகாக சொல்லியிருக்கிறார், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன். இன்றைக்கு எல்லோரது வாழ்விலும் நடக்கும் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருபவர்களுக்கு, இந்தப்படம், ஒரு சிறிய வழியைக் காட்டுகிறது. தன்னம்பிக்கை கொடுக்கக்கூடிய வசனங்கள் பாராட்டும் படி இருக்கின்றன.

ஆதிரை (பூர்ணிமா ரவி) ஒரு எமோஷலான கேரக்டர். அதற்கு நேரெதிரான ஜாலியான கேரக்டர் சாய் (வைபவ் முருகேசன்), இவர்கள் ஒன்றாக பயணிக்கும் தருணங்கள் படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ்வான பலம். இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தக்கதை, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதை. என்பதால், அதை நன்கு புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார், ஆதிரையாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி. வைபவ் முருகேசனும் அதற்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். இருவருமே எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்கள். இருவருமே நல்ல நடிகர்கள். என்பதை, இந்தப்படத்தின் மூலமாக உறுதி படுத்தியிருக்கிறார்கள்.

பூர்ணிமா ரவியின் அப்பாவாக டெல்லி கணேஷ். கை தேர்ந்த நடிப்பு! பிரபு சாலமன் ஒரு காட்சியில் நடித்துள்ளார். மற்ற நடிகர்களான லீலா சாம்சன், வினோதினி வைத்யநாதன், நமிதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஸ்வர், லோகி, அஜய் உள்ளிட்டோரும் பாராட்டும்படி நடித்திருக்கிறார்கள்.

இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் அநேக காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. அது மனதுக்கும், கண்களுக்கும் இதமாக இருக்கிறது. ஆனால், இதை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. காரணம், ‘பச்சைப் பசேல்’ என இருக்க வேண்டிய காட்சிகள், சில இடங்களில் வெளிறிப்போய் இருக்கிறது. சில இடங்களில் காட்சிகள் அவுட் ஆஃப் ஃபோகஸ்! உதரணமாக (Cherukara railway station) ‘செருக்கர’ ரயில் நிலையத்தில் பூர்ணிமா ரவியும், வைபவ் முருகேசனும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியில், ‘பூர்ணிமா ரவி’ அவுட் ஆஃப் ஃபோகஸில் இருப்பார். இப்படி சில காட்சிகள்.

கிளிஃபி கிரிஸ், இசையமைப்பில், சில பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, ஷக்திஶ்ரீ கோபாலன் பாடிய, ராஜேஷ் ஶ்ரீதர் எழுதிய ‘மேகங்கள்’ பாடல் இனிமையாக இருக்கிறது. ஆனந்த் காசிநாத், பின்னணி இசையமைப்பு. அது, இன்னும் கொஞ்சம் பெட்டரா இருந்திருக்கலாம்.

மற்றபடி, ஆபாசமான வசனங்கள், அருவருப்பான காட்சிகள்… இல்லாத ஒரு நல்ல படைப்பு!