full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

தவறான அதிகார வர்கத்தை அடித்து நொறுக்கும் சங்கத்தலைவன்!

மக்கள் கூட்டாக செயல்படும் பொழுது சங்கங்கள் உருவாகும், அப்படி உருவாக்கிய சங்கங்களுக்கு அவர்களை வழி நடத்த தலைவன் ஒருவன் உருவாகுவான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்தலைவன் மக்களின் பிரச்சனைகளை அதிகார மையத்தில் இருக்கும் நபர்களுக்கு எடுத்துச்செல்வார். அதிகாரத்தில் ஏதேனும் தவறுகள் நடந்தால், அல்லது சங்கத்து மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அந்த சங்கத்தின் தலைவனே போராடி சரி செய்ய முயல்வான்.

மாரிமுத்து நடத்தி வரும் தறி நெய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் கருணாஸ். இங்கு வேலை செய்து வரும் ஒரு பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டு கை துண்டாகிறது. இந்த பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்காமல் ஏமாற்ற நினைக்கிறார் மாரிமுத்து. இந்நிலையில் ஊரில் நெசவுத் தொழிலாளர்களுக்காக சங்கம் வைத்து போராடும் சமுத்திரக்கனியிடம் இந்த பிரச்சனையை மறைமுகமாக எடுத்து செல்கிறார் கருணாஸ். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நஷ்ட ஈடை சமுத்திரக்கனி, முறையாக பெற்றுக் கொடுக்கிறார். ஒருகட்டத்தில், சமுத்திரக்கனியிடம் பிரச்சனையை கொண்டு சென்றது கருணாஸ் தான் என மாரிமுத்துவிற்கு தெரிய வருகிறது. கருணாஸின் நிலைமை என்ன ஆனது என்பதே மீதி கதை.

 

நடிகர் கருணாஸ் அவர்களுடைய நடிப்பு மிக எதார்த்தமாக கதாபாத்திரத்தோடு ஒன்றி மிக அருமையாக நடித்திருந்தார். அனைவராலும் பாராட்ட பெற்றார். சூரரை போற்று படத்தில் தனது ஜனரஞ்சகமான நடிப்பின் மூலம் வியப்பூட்டிய கருணாஸ் இந்த படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காமெடி, காதல், துணிச்சல் என இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கத்தலைவனாக வரும் சமுத்திரக்கனியின் நடவடிக்கைகள் மக்களை எழுச்சியூட்டும்படி இருக்கிறது. ஒரு தலைவனின் நோக்கம் செயல் எப்படி இருக்கவேண்டும் என எடுத்துக்காட்டாக அமைக்கிறார். ஏன் போராட வேண்டும், யாருக்காக போராட வேண்டும் என்று பேசி கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார்.

நடிகை ரம்யா, பேச்சு மற்றும் உடல் மொழியில் கிராமத்து பெண்ணாக மாறி இருக்கிறார். குறிப்பாக கருணாஸை ஊக்கப்படுத்த இவர் பேசும்போது நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். கருணாஸை காதலிப்பவராக வரும் சுனு லட்சுமி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மாரிமுத்துவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். தறியுடன் என்ற நாவலை படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மணிமாறன். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் விசைத்தறி தொழிற்கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், விசைத்தறி முதலாளிகளால் கொத்தடிமைகள் போல நடத்தப்பட்டனர். கொடுமையாய் சுரண்டப்பட்டனர். அவ்ர்கள் அனுபவித்த வேதனைகளை ரணங்களை, வலிமிகுந்த வாழ்க்கையை விவரிக்கிறது இந்நூல்.

முதலாளித்துவம், தொழிலாளர்கள், போராட்டம் என திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவு. படத்தின் வசனங்கள் பிளஸ். ராபர்ட் சற்குணத்தின் இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றியிருக்கிறது. பின்னனி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஸ்ரீநிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் சங்கத்தலைவன் மக்களுக்கு தேவைப்படும் தலைவன்!