full screen background image
Search
Saturday 4 May 2024
  • :
  • :
Latest Update

திருமணம் குறித்து நடிகர் விஷால் பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தமிழ் சினிமா குறித்தும், தனது திருமணம் குறித்தும் பேசினார்.

நடிகர் விஷால் விழாவில் பேசியதாவது…

”நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்த பிறகு தான்  திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளேன். அதனை நினைவூட்டுவதற்காகவே  கார்த்தியின் முன்பு அடிக்கடி வேஷ்டி சட்டை அணிந்து  நிற்கிறேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தியும் வாசலில் நானும் நிற்கிறோம்.

எங்கள் நிர்வாகத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே கண்டுபிடிக்க முடியும். எம்.ஜி.ஆர்.ஆர் ஆவியும், சிவாஜி  ஆவியும் கட்டிட நிலத்தில் தான் இருக்கிறது. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை அவர்கள் போக மாட்டார்கள்.

மீண்டும் மீண்டும்  வழக்கு போட்டுப் போரடிக்காதீர்கள். வருகிறாயா. வா என்று நேர்மையுடன் நிற்கிறோம். என்றைக்குமே நேர்மை மட்டுமே ஜெயிக்கும். முதலில் பொதுச்செயலாளராக வருவேன் என்று தெரியாது.மறுபடியும் இன்னொரு இடத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஆனேன்.

ஆனால், முதலில் நடிகர் சங்கமே முக்கியம். இந்தக் கட்டிடம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும். விரைவில் எம்ஜிஆர் சமாதியைப் பார்த்துவிட்டு நடிகர் சங்கக் கட்டிடத்தைப் பார்க்க வருவது போன்ற ரீதியில் கட்டிடம் இருக்கும். அடுத்த தேர்தலிலும் நிற்போம். ஏனென்றால் கட்டிடத்தைப் பாதியில் விட்டுவிட்டுப் போகும் எண்ணமில்லை.

தமிழ் சினிமாவுக்குத் தமிழக அரசு 10% கேளிக்கை வரி விதித்திருக்கிறது. இந்தக் கேளிக்கை வரி எந்த மாநிலத்திலும் இல்லை. இந்தச் சினிமாத்துறையைச் சார்ந்தவர்கள் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்தால் தான் தமிழ் சினிமா நிலைக்கும். கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி, திருட்டு விசிடி என அனைத்து இடர்ப்பாடுகளுக்கு இடையே தமிழ் சினிமா செயல்பட்டு வருகிறது. கேளிக்கை வரியை ரத்து செய்யாவிட்டால் செயல்படவே முடியாது”.

இவ்வாறாக நடிகர் விஷால் பேசினார்!