full screen background image
Search
Friday 3 May 2024
  • :
  • :
Latest Update

ஆர் கே நகரில் அதிரடி காட்ட வரும் விஷால் ?

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர்.

நேற்று அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தனர்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

முக்கிய தேசிய கட்சியான பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கட்சி மேலிடத்தின் முடிவை எதிர்பார்த்து இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால் ஆர் கே நகர் தேர்தலில் குதிப்பார் என்று கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதுபற்றி நடிகர் விஷாலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், “ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருகிறேன். இன்னும் 2 நாளில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவு எடுப்பேன்.” என்றார்.

சுயேச்சையாக போட்டியிடுவீர்களா? அல்லது அரசியல் கட்சி சார்பில் நிறுத்தப்படுவீர்களா? என்று விஷாலிடம் கேட்டதற்கு, “நான் முடிவு எடுத்த பிறகு எல்லா வி‌ஷயங்கள் பற்றியும் சொல்கிறேன்” என்றார்.

இதன் மூலம் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவார் என்றே தெரிகிறது. 4-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்னும் 2 நாளில் முடிவு எடுப்பேன் என்று கூறியிருப்பதன் மூலம் 4-ந்தேதி அவர் முடிவு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.