full screen background image
Search
Thursday 2 May 2024
  • :
  • :
Latest Update

நடனத்துடன் நடிப்பையும் தொடரும் அனுஷா நாயர்

கேரளாவில் இயற்கை எழில் நிறைந்த ஆலப்புலாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர். மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடிக் கொண்டிருந்தவர் பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதா நாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த ‘தாவளம்’ படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாக சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இதுவே அனுஷா நாயருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்க காரணமாய் அமைந்தது.

அனுஷா நாயர் ‘மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி’ படக்குழுவினர்களின் கண்ணில் பட அவர்களது அடுத்த படமான ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’யில் மாலினி என்று பெயரை மாற்றி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். அதை தொடர்ந்து மலையாளத்தில் பகத்ஃபாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனத்தை செலுத்தினார். பரதம், குச்சுப்புடி நடனத்தில் தேர்ச்சி பெற்று மேடை நடனத்தில் கவனம் செலுத்தி வந்தவருக்கு பிரபல மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியிடமிருந்து மீண்டும் நடிக்க அழைப்பு வர மேடை நடனத்துடன் சினிமாவிலும் கவனம் செலுத்த தயாராகி விட்டார் அனுஷா நாயர்.

சினிமாவில் தன் நிஜப் பெயரிலேயே புகழ் பெற விரும்பும் அனுஷா நாயருக்கு தன்னை கதாநாயகியாக்கிய தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை. தன்னால் எவ்வளவு சவாலான கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து பெயர் வாங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கும் அனுஷா நாயர் , ’’நடனமும் நடிப்பும் எனக்கு இரு கண்கள் மட்டுமல்ல, உயிரும் கூட” என்கிறார்.