டிரென்டிங் – திரைவிமர்சனம்
நடிகர்கள்:கலையரசன், பிரியாலயா,பிரேம் குமார்,
இசை:சாம். C.S
இயக்கம்:சிவராஜ்
தயாரிப்பு:மீனாட்சி ஆனந்த்.

கலையரசன் – பிரியாலயா தம்பதி தங்கள் பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடரும் தங்களது யூடியுப் சேனல் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு பெரிய பங்களா வீடு, கார் என வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் அவர்களது யூடியுப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் இன்றி தவிக்கிறார்கள். கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த சமயம், தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர், தாங்கள் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாகவும், அதில் பங்கேற்று வெற்றி பெற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். அதே சமயம், இந்த ரியாலிட்டி ஷோ பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது உள்ளிட்ட பல விதிமுறைகள் விதிப்பவர், தம்பதி இடையே விளையாடும் இந்த போட்டி அவர்களது இல்லத்தில், 7 நாட்கள் விளையாட வேண்டும் என்றும், கொடுக்கும் டாஸ்க்குகளில் வெற்றி பெற்றால் பரிசுத் தொகை உயரும் என்றும், தோல்வியடைந்தால் வெற்றி பெற்ற பரிசுத் தொகையை இழக்க நேரிடும் என்று கூறுகிறார்.
தங்களது பண தேவைக்காகவும், கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்காகவும் மர்ம மனிதரின் போட்டியில் பங்கேற்கும் தம்பதி, ஆரம்பத்தில் எளிமையான போட்டிகளில் வென்று சில லட்சங்களை வென்றாலும், அடுத்தடுத்த போட்டியின் மூலம் தாங்கள் எதிர்பார்க்காத சிக்கல்களை சந்திக்கிறார்கள். அவை என்ன? அதனால் அவர்களது வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் உருவெடுக்கிறது? என்பதை சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களின் மனசாட்சியை உலுக்கும் வகையில் சொல்வது தான் ‘டிரெண்டிங்’.

கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன் மற்றும் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா இருவரும் முழுப்படத்தையும் தங்களது நடிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை மையமாக கொண்டு வடிவமைத்திருக்கும் திரைக்கதை மற்றும் காட்சிகளை தங்களது இயல்பான நடிப்பு மூலம் சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலையரசன் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு பாராட்டு பெற்றிருக்கிறார். பல இடங்களில் வசனம் பேசாமல் தனது கண்களின் மூலமாகவே நடித்திருக்கும் கலையரசன், தனது கதாபாத்திர குணாதிசயங்கள் மாற்றம் அடையும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
நடனம் மூலம் அறியப்பட்ட நடிகை பிரியாலயா, இந்த படத்தில் சிறந்த நடிகையாக முத்திரை பதித்துள்ளார். நாயகனுக்கு இணையான வேடத்தில், போட்டி போட்டு நடித்திருப்பவர் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்து விடுகிறார்.
சிறிய வேடம் என்றாலும் பிரேம் குமாரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. பெசண்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவனயா ஆகியோர் வருகை திரைக்கதையின் திருப்பத்திற்கு உதவியிருக்கிறது.
ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும் வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தடுமுட்டு சத்தங்களை தவிர்த்துவிட்டு பின்னணி இசையை அளவாக கையாண்டிருக்கும் சாம்.சி.எஸ், மர்ம நபரின் குரல் மற்றும் அவரது எண்ட்ரி பீஜியம்களை கவனம் ஈர்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், சில இடங்களில் விறுவிறுப்பாகவும், பல இடங்களில் பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்பவும் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
யூடியுப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பலர் அதற்காக பல்வேறு யுத்திகளை கையாள்கிறார்கள். குறிப்பாக தங்களது அன்றாட வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்துக் கொள்வதோடு, சில அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் அவலங்களும் நடந்து வருகிறது. அத்தகைய மனிதர்களுக்கு அறிவுரையாக மட்டும் இன்றி எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ்.
தம்பதியின் யூடியுப் சேனல் திடீரென்று டெலிட் ஆவது, அந்த நேரத்தில் ரியாலிட்டி ஷோ பற்றிய அழைப்பு, அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என படம் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், அதனால் தம்பதி சந்திக்க இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் பார்வையாளர்கள் யூகிப்பது போலவே இருக்கிறது. இருப்பினும், பிரேம் குமாரின் வருகைக்குப் பிறகு தொடங்கும் இரண்டாவது சீசன் போட்டியும், அதில் தம்பதிக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.

