சம்பள பாக்கியால் முடங்கிய படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம்

News
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சந்தானம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’ படம் காதலர் தினமான வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. டிக்கிலோனா, பிஸ்கோத் ஆகிய 2 படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சந்தானம் ஏற்கனவே கதாநாயகனாக நடித்துள்ள ‘ஓடி ஓடி உழைக்கனும்’ என்ற படம் சம்பள பிரச்சினையால் 2 வருடங்களாக முடங்கி இருப்பதாக பட அதிபரும், தயாரிப்பாளர் சங்க ஆலோசனை குழு உறுப்பினருமான கே.ராஜன் குற்றம் சாட்டி இருந்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, “சிவஸ்ரீ சீனிவாசன் தயாரித்த ‘ஓடி ஓடி உழைக்கனும்’ என்ற படத்தில் நடிக்க சந்தானத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசி ரூ.1 கோடி அட்வான்சாக கொடுத்தனர். படம் பாதி முடிந்த நிலையில் மேலும்
ரூ.1 கோடி கொடுத்தால்தான் நடிப்பேன் என்று கூறிவிட்டார். படத்துக்கு ரூ.4 கோடியை கடன் வாங்கி செலவு செய்துள்ளனர். தயாரிப்பாளர் வட்டி கட்ட முடியாமல் கஷ்டப்படுகிறார். அந்த படத்தை பணம் கேட்காமல் சந்தானம் முடித்து கொடுக்க வேண்டும். படம் முடிந்ததும் பாக்கி பணத்தை தயாரிப்பாளர் சங்கமே அவருக்கு வாங்கி கொடுக்கும்.” என்றார். இந்த நிலையில் அந்த படத்தில் மீண்டும் நடிக்க சந்தானம் சம்மதம் தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கு ஆகும் செலவுக்கான தொகையை தயார் செய்யும்படியும், சம்பளத்தை கேட்காமல் நடித்து கொடுக்கிறேன் என்றும் அவர் தகவல் அனுப்பி இருப்பதாக கே.ராஜன் தெரிவித்தார்.