அது மட்டுமல்லாமல் மேடையிலேயே எல்லோரையும் பார்த்து இவனுக்கு யாராவது கதாநாயகன் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார்.
அதன்பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் ஷெரிஃபை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நிகழ்ச்சிகள் தான் என்று கூறினேன். படம் நடிக்கிறாயா? என்று கேட்டார். நான் உடனே சம்மதித்தேன். தயாரிப்பாளர் உன்னை வைத்து படம் எடுக்க சம்மதித்து விட்டார். நீ தான் கதாநாயகன் என்று கூறினார்.
அதேபோல் என்னை கதாநாயகனாக ஆக்குவதில் விருப்பம் தெரிவித்த முதல் தயாரிப்பாளர் ஜெய் கிரண் சார் தான். நம்முடைய குடும்பத்தாரும் உறவினர்களும் 5 லட்சம் நம்மை நம்பி கொடுத்தாலே பெரிய விஷயம். ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிலர் உதவுவார்கள், இல்லையா! அப்படித்தான் பல கோடிகளை என்னை நம்பி செலவழித்திருக்கிறார். அவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
பாலாஜி சக்திவேல் சாரிடம் கதை கூறியபோது நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். நான் கதாநாயகன் என்றதும் மறுத்துவிடுவார் என்று தயங்கினேன். ஆனால், இந்த சாதாரண ஒரு ஆளுக்காக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
அதேபோல் தான் அர்ச்சனா அம்மாவும் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
அடுத்ததாக, கதாநாயகி தேர்வு நடைபெற்றது. அப்போது எல்லோரும் கதை கேட்பார்கள். நன்றாக இருக்கிறது என்பார்கள். கதாநாயகன் நான்தான் என்றதும் யோசித்து சொல்கிறேன் என்று சென்று விடுவார்கள். இப்படி 50 பேருக்கு பிறகு நமீதா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் என்னுடன் நாயகியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார், அவருக்கு மிக்க நன்றி.
மேலும், இப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

