வாழ்த்து சொன்னது குத்தமாய்யா??!

News

“எங்கேயும் எப்போதும்” படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் நட்பானவர்கள் நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும். அதன் பின்னர் “பலூன்” படத்திலும் இணைந்து நடித்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாகவும், ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. நாளுக்கு நாள் தீவிரமான அவர்களது காதல், விரைவில் திருமணம் வரை போகலாம் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இந்த தகவல்களுக்கு எல்லாம் அஞ்சலியும், ஜெய்யும் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தாலும், “அவர்கள் காதலிப்பது உண்மை தான்” என அடித்து சத்தியம் செய்தார்கள் சினிமா உளவாளிகள்.

திடீரென என்னானதோ, அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் கசியத் தொடங்கியது. அவர்களும், “எங்களுக்குள் இனி ஒன்றுமில்லை” என கருத்தருளினார்கள். அதன் பிறகு உளவாளிகளும் அவர்களை விட்டு வேறு பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் தான், ஜெய்க்கு பிறந்தநாள் வந்தது. பிறந்தநாள் என்றால் எல்லோரும் வாழ்த்துவது வழக்கம் தானே? அப்படித் தான் அஞ்சலியும் “வாழ்த்துக்கள் ஜெ. உலகில் உள்ள அனைத்து சந்தோ‌ஷங்களும் கிடைக்க வாழ்த்துக்கள்” என டுவீட்டினார்.

போதாதா உளவாளிகளுக்கு, “அவர்கள் பிரியவில்லை, இன்னும் காதலிக்கிறார்கள். காதலில்லாமல் ஏன் வாழ்த்த வேண்டும்?” என மீண்டும் கொளுத்தி போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு வாழ்த்து சொன்னது குத்தமாய்யா??!