மலையாளம் பேசும் ‘ஆதார்’

தமிழில் பெரும் பாராட்டுகள் பெற்ற வெற்றிப் படத்தை மலையாளத்தில் யோகி பாபு முதன்மைப் வேடத்தில் நடிக்க ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார்
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
மலையாளத்திலும் ‘ஆதார்’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள்.
‘ஆதார்’ மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், “2022ம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ஆதார்’ பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் ‘ஆதார்’ படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் ‘ஆதார்’ எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.
கருணாஸ் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய ராம்நாத் பழனிகுமார் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் ஜீவா-நயன்தாரா நடித்த ‘திருநாள்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ‘ஆதார்’ மலையாளம் ரீமேக் பணிகளை விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
***

