ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் நாயகன் வெற்றி. ரத்தக்கறையுடன் இருக்கும் வெற்றி, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் கொலையாளி என்பதை தெரிந்து காெள்கிறார்.இதனால், தன்னை அடைத்து வைத்திருக்கும் நபரிடம், “நான் யார், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்..” கேள்வியாய் கேட்கிறார். இதற்கு பதிலாக, “நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்குள் நீ கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என ட்விஸ்ட் வைக்கிறார், அந்த மர்ம நபர். அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் ஹீரோவை, போலீஸ் துரத்துகிறது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் வெற்றி துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகர் “என் மனைவியை மட்டும்தானே கொல்ல சொன்னேன்…என் மகளை என்ன செய்தாய்?” என கேட்கிறார்.
வெற்றியை சுற்றி என்ன நடக்கிறது? உண்மையிலேயே அந்த கொலைகளை செய்தது யார்? வெற்றியை துரத்தும் நபர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் வெற்றி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் தனது இயல்பான நடிப்பை தவற விட்டிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பார்வதிக்கு பெரிதாக வேலையில்லை. மனோதத்துவ மருத்துவராக வரும் ஹரிஷ் பேரடியின் நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது.
மெமரி எரேசிங் மற்றும் மெமரி இன்ஸர்டிங் எனும் ஒரே கான்சப்டை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சாம் பிரவீன். இவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால், அந்த முயற்சி பெரிதாக எடுபடவில்லை. காட்சி திருப்பங்கள் படத்திற்கு பலம்.படத்திற்கு தேவையான இசையை கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ். ஆர்மோ மற்றும் கிரண் ஆகியோரின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.